மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

கரைசேராமல் கண்விழிக்கப்பட்ட கனவுகள்

[மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. படிப்புப் படித்துக் கொண்டிருந்த போதே தொலைதொடர்புத் துறையில் வேலை கிடைத்தது. படிப்பைப் பாதியில் விட்டுச்செல்ல நேரும் என்ற கவலையில் வாடிய நாட்களில் பாடியது]

புதுமனையின் வாசலில் பூர்த்தியாகும் நிலையில்
நின்றுவிட்ட ஒரு கோலத்தில்
கோடுகளால் சிறைபிடிக்கப்படாத சில புள்ளிகள்
கண்ணீர்ச் சொட்டுகளாய்க் கரைந்து கொண்டிருக்க-
கோலம் முடிந்தபின் வைக்கப்பட வேண்டிய
பூசணி மலர்கள்
திண்ணை ஓரத்தே கிடந்து கருகுகின்றன.

வானத்து முழுநிலவின் வடிவ தரிசனத்துக்காய்
வரங்கேட்டுத் தவம்புரிந்த சில அல்லிகள்-
பூர்ணிமைக்கு முந்தைய நாள்
பொய்கை வற்றிவிட
பூக்காமலேயே மொட்டுகளாய் உதிர்கின்றன.

நீர்வற்றிக் காய்ந்த ஆற்று மணலில்
உண்ணும் நீருக்காய் ஊற்றுப் பறித்துக்
கண்ணீரின் தெளிவாய்க்
கற்கண்டு நீரைக் கண்ணில் காண்கையில்
எங்கோ பெய்த மழையால்
திடீர் வெள்ளம் கரைபுரண்டு வந்து
ஊற்றை மேவுகிறது.

மலையடிவாரத்து மாந்தோப்பு நிழலில்
வசந்தத்தின் கனவுகளை அனுபவிக்க வந்த
ஓர் ஒற்றைக் குயில்-
நிறைவேறாமல் முற்றுப்பெற்றுவிட்ட
நினைவுகளோடும்
கரைசேராமல் கண்விழிக்கப்பட்ட
கனவுகளோடும்
வசந்தகால வருகைக்கு முன்பாகவே
நிரந்தரமாக அந்த மாந்தோப்பைப் பிரியப்போகிறது.

இனி வரப்போகும் வசந்தமும்…
துளிர்க்கவிருக்கும் தளிர்களும்…

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்